tamilnadu

img

“பாலஸ்தீன தியாகிகள் நகரில்” இந்திய மாணவர் சங்க 18வது அகில இந்திய மாநாடு கல்விக்காக உயிர்நீத்த தியாகிகள் நினைவாக நாடு முழுவதும் ஜோதிப் பயணம்

“பாலஸ்தீன தியாகிகள் நகரில்” இந்திய மாணவர் சங்க 18வது அகில இந்திய மாநாடு கல்விக்காக உயிர்நீத்த தியாகிகள் நினைவாக நாடு முழுவதும் ஜோதிப் பயணம்

மதுரை, ஜூன் 24 - இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டை நோக்கி மதுரை மண்ணிலிருந்து மாணவத் தியாகிகள் சோமசுந்தரம், செம்புலிங்கம், விக்கிரமசிங்கபுரம் குமார் ஆகியோரது நினைவுச்சுடர் எழுச்சியுடன் புறப்பட்டது.  இந்திய மாணவர் சங்கத்தின் 18வது அகில இந்திய மாநாடு “பாலஸ்தீன  தியாகிகள்  நகர்” என்ற பெயரில் ஜூன் 27ஆம் தேதி துவங்கி 30 வரையில் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜூன் 20ஆம் தேதி முதல் இந்திய நாடு முழுவதும் கல்விக்காக உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து பெறப்பட்ட கொடியுடன் தியாகிகள் நினைவு ஜோதி பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்ட சோமு-செம்பு -குமார் நினைவுச் சுடர் பயணத்திற்கு  மதுரை பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அகில இந்திய துணைச் செயலாளர் ஆதர்ஷ் ஷாஜி பேசுகையில், “பாலஸ்தீனத்தில் 20,000 மேற்பட்ட குழந்தைகள் உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவும் இஸ்ரேலும் இரக்கமே இல்லாமல் தொடர்ந்து போர் தொடுத்துக்கொண்டிருக்கின்றது. சர்வதேச அளவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் வகையில்தான் இந்திய மாணவர் சங்க 18வது அகில இந்திய மாநாட்டிற்கு ‘பாலஸ்தீன தியாகிகள் நகர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். “ஜூன் 27ஆம் தேதி தமிழ்நாட்டின் சோமு, செம்பு வி.கே.புரம் குமார் ஆகிய மாணவத் தியாகிகளின் ஜோதி மாநாட்டில் ஏற்றப்படும். கேரளாவில் கே.வி. சுதீஷ், ஜி.வி. ஜோஸ், சுதீப் உள்ளிட்ட 122 தோழர்கள் உயிரிழந்துள்ளார்கள். அவர்களுடைய நினைவாகவும் ஜோதிகள் கொண்டுசெல்லப்படும்” என்று அவர் மேலும் கூறினார். “’படிப்போம் போராடுவோம்’ என்று மாணவர்களுக்காகவும்; சாதிவெறியர்களுக்கு எதிராகவும் மதவெறியர்களுக்கு எதிராகவும் போராடி 122 மாணவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால் அவர்கள் உயர்த்திப்பிடித்த வெண்கொடி ஒரு அடி கூட கீழே விடாமல் சோசலிசத்திற்கான கொடியைத் தூக்கிப்பிடித்து முன்னேறிச் செல்கின்றோம்” என்று உறுதியளித்தார். தியாக வரலாறு இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் ஜி.அரவிந்த்சாமி பேசுகையில், “இந்திய மாணவர் சங்கம் 1970ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி கிடைத்திட, கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி கனவை நிறைவேற்ற ‘படிப்போம் போராடுவோம்’ என்ற லட்சியத்திற்காக சுதந்திரம் ஜனநாயகம் சோசலிசம் என்ற வெண்கொடி ஏந்தி தொடங்கியது. 55 ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி உரிமைகளுக்காக, தேசத்தைப் பாதுகாக்க, அரசியல் அமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க அனைத்து போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறோம். இந்திய மாணவர் சங்க வரலாறு ஏட்டில் எழுதப்பட்டதல்ல, ஒவ்வொரு தியாகிகளுடைய ரத்தத்தால் எழுதப்பட்டது” என்று உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார். ஒன்றிய அரசின் கல்வித் தாக்குதல்கள் “ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் கை வைத்தது கல்வியைத்தான். இந்திய நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020 மூன்று விஷயங்களைச் சொல்கிறது - ஒன்று கல்வி காவிமயம், இரண்டு வணிகமயம், மூன்று கல்வியை மத்திய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டு செல்வது, கல்வியைச் சீர்குலைப்பதற்கான அனைத்து பணிகளையும் இந்த ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது” என்று விமர்சித்தார். “ஒன்றிய பாஜக அரசு  ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்கக்கூடாது என்பதற்காகவே பொது நுழைவுத் தேர்வுகளைக் கொண்டு வந்துள்ளது. அதுதான் நீட், குயிட் போன்ற தேர்வுகள். நீட் தேர்வை நடத்தும் என்டிஏ ஒரு தனியார் ஏஜென்சி. தமிழகத்தில் மாணவர்களைச் சித்திரவதை செய்யும் வகையில் தேர்வு மையங்கள் மாற்றம், உடைகளில் கட்டுப்பாடுகள் என பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. திருவாரூர் தேர்வு மையத்தில் ஒரு மாணவி தாலியைக் கழற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் வடமாநிலங்களில் நீட் வினாத்தாள்கள் முன்னதாகவே டெலிகிராமில் கிடைத்தது. இப்படி தமிழக மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்லக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். “பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆளுநர்கள் தனியாக ஒரு ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கல்லூரி வளாகங்களுக்குள் சென்று ‘சமஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும்’, ‘சரஸ்வதியைக் கும்பிடுங்கள், படிப்பு நன்றாக வரும்’ என்று கூறுகிறார்கள். இதுபோன்ற செயல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். “ஒன்றிய அரசு மாநிலத்திற்காகத் தர வேண்டிய கல்வி நிதி எஸ்எஸ்சி திட்டத்தின் கீழ் நிதி வழங்க வேண்டும் என்றால் பிஎம்ஸ்ரீ திட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி தருவோம்’ என்று சொல்லிவிட்டு ₹2,184 கோடி இதுவரை தரவில்லை. தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக அதற்காகப் போராடிக்கொண்டிருக்கின்றது” என்றும் கூறினார். தமிழக அரசுக்கான கோரிக்கைகள் “தமிழக அரசு மாணவர்களின் கல்வி உரிமைக்காகப் போராடும் இந்திய மாணவர் சங்கத்தின் பேரணிகளைத் தடுத்து நிறுத்துகிறது. பல கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது, அடிப்படை வசதிகள் இல்லை, மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறது. 121 கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. 20 ஆண்டுகளாக மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தாமல் இருக்கிறீர்கள். இது எந்த வகையிலும் ஏற்புடையது கிடையாது” என்று விமர்சித்தார். “கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும். கட்டண நிர்ணயக் குழு அமைக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாக அது அமைக்கப்படவில்லை” என்றும் சுட்டிக்காட்டினார். அனைத்து கல்லூரி வளாகத்திலும் மாணவர் பேரவைத் தேர்தலை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். “மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சாதி, மதம், மொழி, இனம் கடந்து அனைத்து மாணவர்களையும் இணைத்துக்கொண்டு பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை, போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றும் அரவிந்த்சாமி கூறினார். வரவேற்பு நிகழ்ச்சியில் சோமு-செம்பு அறக்கட்டளை சார்பில் எஸ். காளிதாஸ், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், இந்திய மாணவர் சங்க திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் சைலஸ் அருள்தாஸ், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டீலன் ஜஸ்டின், மாவட்டச் செயலாளர் டேவிட் ராஜாதுரை, மத்தியக்குழு உறுப்பினர் பிருந்தா உள்ளிட்டு பலர் கலந்துகொண்டார்கள். முன்னதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், பயணக்குழுவினருக்கு மலர் தூவி எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.